40 ஆண்டு காலம் உங்களுக்கு பணியாற்றி உள்ளேன் இனி…. அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கே.என். நேரு
புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்
பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரத்தை தொடங்கினார் . மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம் பூனாம்பாளையத்தில் தொடங்கிய பிரச்சாரத்தில் தொழில் அதிபர் கே.என்.ராமஜெயம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின், பூனாம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரச்சாரத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அய்யம்பாளையம் தத்தமங்கலம் தழுதாளப்பட்டி ஓமந்தூர் வீரானி திருவல்லரை திருப்பஞ்சலி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு பகுதியிலும் வேட்பாளர் அருண் நேருவுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த பிரச்சாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
மண்ணச்சநல்லூர் பெரிய நகரமாக உருவாகி வருகிறது. நகரமாக உருவாகும் போது வேலைவாய்ப்பு பெருகும். மண்ணச்சநல்லூர் சமயபுரத்தையும் மாநகராட்சியில் இணைத்து புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பேரூராட்சியின் பதவி காலம் முடியும் போது மாநகராட்சியாக மாறும். மாநகராட்சியாக ஆகும்போது பூனாம்பாளையம் கிராமத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் அருண் நேருவை முதல்வரே நிற்கிறார் என நினைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து பணியாற்றக் கூடிய ஒரு வேட்பாளர் இவர். 40 ஆண்டு காலம் நான் உங்களுக்காக பணியாற்றி வருகிறேன். உங்கள் பேராதரவை உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு பேசினார்.