ரூ.1000 கோடி நிலத்தை மீட்டது போல் திருச்சியில் கே.என்.நேரு ஆக்கிரமித்துள்ள வக்பு வாரிய இடத்தையும் மீட்பீர்களா?அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையின் இருபகுதிகளிலும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளது. சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ஆக்கிரமித்து இருந்த குத்தகைதாரர்களிடமிருந்து 33 ஆண்டுகளுக்கு பின் தமிழக அரசு மீட்டுள்ளது. இதற்காக அரும்பாடப்பட்ட அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்ததோடு, அரசு நிலம் மீட்டதற்கு பெருமை கொண்டார்.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆயிரம் கோடி அரசு நிலத்தை மீட்டது போல திருச்சியில் திமுக அலுவலக கார் பார்க்கிங் வசதிக்காக ஆக்கிரமித்துள்ள வக்பு வாரிய இடத்தையும் உங்கள் கட்சியினரிடமிருந்து மீட்டால் பரவாயில்லை.
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 15 ம் தேதி விசாரணை. வழக்கு எண்: CMA 17/2017″ பதிவிட்டுள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து தற்போதைய திமுக அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிராக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளுக்கு மேல் இவ்வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டதாக பெருமையுடன் கூறிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை குறிப்பிட்டு தங்கள் கட்சிக்கு நிர்வாகிகள் ஆக்கிரமிப்புள்ள வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பு வழக்கை சுட்டிக்காட்டி இருப்பது தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.

