
கோனோகார்பஸ் எனும் நச்சு மரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் அறத் தமிழன் பேரியக்கம் சார்பில் நேற்று மாலை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு அறத்தமிழன் பேரியக்க நிறுவனர் விஜய் சீதாராமன் தலைமை வகித்து பேசுகையில்: உலக நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களும் தடை செய்யப்பட்ட ஒரு மரம் தான் இந்த கோனோ கார்பஸ் எனும் நச்சுமரம். இது ஒரு நீர் உறிஞ்சி மரமாகும்.
இம்மர வளர்ப்பிற்கு தெலுங்கானா அரசு எழுத்துப்பூர்வ தடை விதித்துள்ளது. பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இந்த மரம் இன்று தமிழக முழுவதும் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக திருச்சியில் இம்மரங்கள் சாலை ஓரங்களிலும், நடைபாதை மற்றும் பூங்காக்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மரத்தின் வேர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீரை கூட உறிஞ்சும் தன்மை கொண்டவை. வீட்டு சுவர்கள், நிலத்தடியில் செல்லும் குடிநீர் குழாய்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களையும் தகர்க்கும் தன்மை கொண்டவை.
இம்மரங்களினால் மனிதர்களுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற உடல் நல குறைபாடுகளும் உண்டாகின்றன. காற்றில் உள்ள ஈரப்பதங்கள் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை உணர்ந்த அரபு நாடுகள் தற்போது தங்கள் நாட்டில் இம்மரங்களுக்கு தடைவிதித்தும் அகற்றியும் வருகின்றனர்.
எனவே தமிழ்நாட்டில் இம்மரத்தினை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் கலைந்து எரியவில்லை எனில் தமிழ்நாடு பாலை நிலம் ஆவதற்கு நாமும் ஒரு காரணியாக மாறி நிற்போம் என்றார்.
திருச்சியில் உள்ள இம்மரங்களை அகற்றக்கோரி விரைவில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம் எனவும் கூறினார்.
தமிழன் பேரியக்க இளைஞர் அணி செயலாளர் சித்திக் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.
நிகழ்ச்சியில்
பேரியக்க நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

