
திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பலரும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது விலக்கிக் கொள்ளப்பட்டது.
முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்ற வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.100 முதல் ரூ.200 ரூபாய் வரை கட்டாய கட்டணம் வசூலித்துக்கொண்டு தான் மொட்டை அடிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி அதிக கட்டணம் வசூலித்த 7 பேரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்தார்.இதனை கண்டித்து மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 160 பேர் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.முடி கணக்கை செலுத்தும் மண்டபத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆன்லைன் டோக்கன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகவும்,தங்களுக்கு அரசு பணிக்கான ஊதியம் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும்,இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அந்த தொழிலாளர்கள் கூறினர்.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஏழு பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட வேண்டும் எனக் கூறி தொடர் போராட்டத்தில். ஈடுபட்டதால் இன்று முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

