திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.. சோஷியல் மீடியாவில் ஆபாசமான மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் இப்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சேலம் குகை லைன்மேடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் அஜித் சாக்கே என்பவர், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஆகஸ்ட் 1ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சில பெண்கள் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், அந்த வீடியோக்கள் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும், சில வீடியோக்களில் ஆபாசமான உடைகள் அணிந்து, பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் எளிதாக பரவுவதால், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது அதன் தாக்கம் இருக்கும் என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரில் திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, யூடியூபர் பிரியங்கா ராஜ் உள்ளிட்ட 12 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் அஜித் குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த வீடியோக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கணக்குகள் குறித்து விசாரணையை தொடங்கினர்.விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட சமூக வலைதள கணக்குகள் மற்றும் வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் திருச்சி சாதனா உள்ளிட்ட சிலர் வெவ்வேறு ஐ.டி.க்களை பயன்படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வந்ததாக போலீசாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்
இதற்கிடையே, இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க திருச்சி சாதனா தரப்பில் முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, திருச்சி சாதனாவுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன், திருச்சி சாதனா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் அவரை கைது செய்வதற்கான போலீசாரின் நடவடிக்கைக்கு அடுத்தகட்டம் உருவானது.இதையடுத்து, சோஷியல் மீடியா சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் அக்கவுண்ட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக திருச்சி சாதனாவின்சுமார் 1.2 மில்லியன் (12 லட்சம்) சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனல் இப்போது முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.யூடியூப் சேனல் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் கவனம் பெற்றுள்ளது.. அதுமட்டுமல்ல, முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், திருச்சி சாதனாவை கைது செய்வதற்கான நடவடிக்கையை சேலம் சைபர் கிரைம் போலீசார் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்..
அவரை கண்டுபிடித்து கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால், இந்த விஷயத்தின் சீரியஸ்தன்மை உணராமல், தன்னுடைய சேனல் முடக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள திருச்சி சாதனா, தான் செய்தது தவறு என்பதை உணராமல் புலம்பியுள்ளார். . அதில், தனது வீடு மற்றும் காரின் மாதாந்திர தவணைத் தொகையை (EMI) கட்டுவதற்குப் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், மீண்டும் விவசாயக் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சமூக வலைத்தள வருமானத்தை நம்பியே தனது மகளைக் கல்லூரியில் படிக்க வைத்துள்ளதாகவும், தற்போது அதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

