என் தொகுதியில் காலை வைத்தால் கொன்று புதைத்து விடுவேன்.சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் .திமுகவினர் கண்டனம்
தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபரை வர விட மாட்டேன் எனவும் தன்னை மீறி செய்பவர்களை கொன்று புதைத்து விடுவேன் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.தமிழக வெற்றிக் கழக தலைவர் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் அரசியல் அரங்கில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு ஏற்படுத்தியுள்ளன.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத் தொடர்பான பழைய வீடியோவும், அமைச்சர் விஜய் பாலாஜியின் சர்ச்சைக்குரிய பேச்சு, அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு ரீல்ஸும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன.எவ்வளவோ எச்சரித்தும், தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளர் ராஜகுரு என்பவரிடம் அமைச்சர் பேசும் அவர்,” சாத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஒருவர் எதற்காக எனது தொகுதியில் வந்து அதிகாரிகளை சந்திக்க வேண்டும்? அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? தூக்கி வைத்து கொன்று புதைத்து விடுவேன். எனது தொகுதிக்குள் சாத்தூர் தொகுதிக்காரர்களை காலை கூட வைக்க விட மாட்டேன். மீறி வைத்தால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்பேன்” என பேசியதாக அந்த ஆடியோ பரவி வருகிறது.இந்நிலையில் இதனை கடுமையாக விமர்சித்துள்ளது திமுக ஐடி விங். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான மோதல்களும், அதைத் தொடர்ந்து வெளியாகும் மிரட்டல் ஆடியோக்களும் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. மக்கள் நலனைப் பேண வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, பொதுவெளியிலும் போனிலும் பகிரங்கமாக வெட்டிப் புதைத்துவிடுவேன், கொன்று விடுவேன் என்ற ரேஞ்சிற்கு ரவுடிச பாணியில் மிரட்டல் தொனியில் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும்?அதிகார பலத்தையும் கட்சிப் பதவியையும் வைத்துக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய போக்கு, ஜனநாயகத்தின் மீதும் சட்டம் ஒழுங்கின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. வன்முறைப் பேச்சையும் ஆக்ரோஷமான மிரட்டல்களையுமே தீர்வாக நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.மக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகளும் இப்படிச் தெருவொழுங்கு அற்ற ரவுடிகளைப் போல நடந்துகொள்வதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் லட்சணமா? இத்தகைய வன்முறைப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தி, மிரட்டலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளது.இந்நிலையில், அமைச்சர் ஜெகதீஷ்வரி தவெக ஒன்றிய செயலாளர் ஒருவரை தொகுதி மாறி வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டுவது போன்று வெளியான ஆடியோ, அவர் அமைச்சர் ஆவதற்கு முன்னர் பேசியது எனவும்,
ஜெகதீஷ்வரியிடம் எதிர்முனையில் பேசிய நபர் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அமைச்சரின் விசுவாசிகள்.

