திருவெறும்பூர் தொகுதி கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நீர்நிலைகளில் படகு போக்குவரத்து மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்க முன்னாள் அமைச்சர் மகேஷ் கடிதம்
திருவெறும்பூர் தொகுதி நீர்நிலைகளில் படகு போக்குவரத்து மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்க முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கிய நீர்நிலைகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பொழுதுபோக்குத் தளங்களாக மேம்படுத்த வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பார் பெரிய குளம், கல்கண்டார்கோட்டை மாவடிக்குளம் மற்றும் குண்டூர் பெரியகுளம் ஆகிய நீர்நிலைகள் அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் அரணாகவும் விளங்கி வருகின்றன.
இப்பகுதியிலும், இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட இந்த நீர்நிலைகளில் படகு போக்குவரத்து (Boating) வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் மூலம் இது ஒரு சிறந்த பொழுதுபோக்குத் தளமாக மாறும்.
மேலும், பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த நீர்நிலைகளின் கரைப் பகுதிகளில் பேவர் பிளாக் (Paver Block) கற்களாலான நடைபாதையை அமைத்துத் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பொதுமக்களின் கோரிக்கையினைச் சிறப்பு கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி உடனடியாக நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், விரைவில் படகு போக்குவரத்து மற்றும் நடைபயிற்சி தளம் அமைக்கும் பணிகளைத் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்களின் சார்பில் அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

