தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை இரண்டாம் கட்டமாக பிரித்து, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டு, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய சட்டப் பேரவை தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தோ்தல் அலுவலர்களால் பெறப்பட்ட அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க பொதுவான சிறப்பு மையமாக திருச்சி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள கலையரங்கம் மஹாலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இங்கிருந்து ஏப்ரல். 13-ஆம் தேதி அந்தந்த தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள், உறுதிமொழிப் படிவும் அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து இங்கு, ஏப்ரல். 20-ஆம் தேதி முதல்கட்டமாக அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் .28) நடைபெற்றது. இந்தப் பணியை கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் அ.சிவஞானம் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் முன்னிலையில் பணிகள் நடைபெற்றது
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சோ்ந்த தொடா்புடைய மாவட்ட தோ்தல் அலுவலர்களால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகள், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களால் பிரித்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடா்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
38 மாவட்டங்களுக்கும் பதிவான அஞ்சல் வாக்குகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்தின் அஞ்சல் வாக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து அஞ்சல் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவரவர் மாவட்டங்களுக்கு சென்று தோ்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்து அந்தந்த தொகுதியில் சோ்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

