சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை விரைவாக நடைபெற வேண்டுமா? திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழைகளிடம் பல லட்சம் கேட்கும் நபர் .நடவடிக்கை எடுப்பாரா டீன் ?
திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை. திருச்சி மாநகர மையத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் தினமும் திருச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக திருச்சியை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இங்கு அவர்களுக்கு ரத்த சுத்திகரிப்பு தினசரி இலவசமாக செய்யப்படுகின்றது. இப்படி அனைத்துமே இலவசமாக நடைபெறும் இந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்துள்ள நோயாளிகள் இடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை பேரம் பேசி வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பாளராக தேனி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து தங்கி பணிபுரியும் ஒரு நபர் ஒவ்வொரு நோயாளிடமிருந்தும் உங்களுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை விரைவாக நடைபெற வேண்டும் என்றால் அதற்காக நான் சில மாற்று வழிகளில் ஈடுபட்டு உங்களுக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்து தருகின்றேன் அதற்கு சிறிது பணம் அதிகம் செலவாகும் என்று கூறி ஒவ்வொரு நோயாளியிடமிருந்தும் பல லட்சம் ரூபாய் கையூட்டாக பெறுவதாக அதிர்ச்சி தரும் தகவல் நமது கவனத்திற்கு வந்து உள்ளது. மேலும் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக வரும் நோயாளிகளிடமிருந்து 5,000 முதல் 10,000 ரூபாய் வரை பெறுவதாகவும் தகவல். இதனைத் தொடர்ந்து நாம் அந்த மருத்துவமனையில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது குறிப்பிடத்தக்க அந்த நபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்து தங்கி இருக்கும் நோயாளிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பதும் பணம் தர மறுக்கும் நோயாளிகளுக்கு பல வகைகளில் இடைஞ்சல் செய்வதும் அவர்களுக்கு இரத்த சுத்திகரிப்பை சரிவர செய்யாமல் காலம் தாழ்த்துவதுமாக இருப்பதை நம்முடைய புலனாய்வு குழு தங்கள் கண்களாலேயே கண்டது. அவரிடம் இது தொடர்பாக கேள்வி கேட்ட பொழுது இந்த இடத்தில் நான் வைத்தது தான் சட்டம் என்னை எவரும் எதுவும் செய்ய முடியாது நான் என்னுடைய துறை சார்ந்த மருத்துவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை உடனுக்குடன் செய்து விடுகின்றேன் அதனால் என்னை கேள்வி கேட்க இங்கே எவருக்கும் உரிமை கிடையாது விருப்பம் இருந்தால் பணத்தை கொடுத்துவிட்டு உங்கள் கிட்னியை மாற்றிக் கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் எவ்வளவோ தனியார் மருத்துவமனைகள் இருக்கின்றன அங்கே சென்று விடுங்கள் என்று மிகவும் ஆணவத்தோடு கூறி வருகின்றார் (அந்த தனியார் மருத்துவமனைகளில் இருந்தும் இவருக்கு கமிஷன் வருவதாக தகவல்). பல லட்சம் செலவு செய்து தன்னுடைய உறுப்புகளை மாற்ற வழியில்லாத ஏழைகள் தான் பெரும்பாலும் இந்த அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள். தமிழகத்தின் மிகச்சிறந்த தரமான அரசு மருத்துவமனையான இந்த திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையிலேயே இவ்வளவு குற்றச்சாட்டுகள் எழுவது மிகவும் வேதனையாக ஒன்றாக உள்ளது.் கண்டிப்பிற்கும் நேர்மைக்கும் பெயர் போன மருத்துவமனையின் முதல்வர் உடனடியாக சாட்டையை சுழற்றி இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பாவி நோயாளிகளின் எதிர்பார்ப்பு.

