தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (மார்ச் 14) வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாகதேவி பதவி உயர்வு பெற்றார்.
பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாக தேவி, உளவுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஐபிஎஸ் நியமிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட பால நாகதேவி 1995 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். போதைத் தடுப்பு பிரிவின் உளவுப் பிரிவிலும், நீலகிரி எஸ்.பி-யாகவும், கோவை மண்டல டி.ஐ.ஜி-யாகவும் பணியில் இருந்துள்ளார். மதுரை சரக முதல் பெண் டி.ஐ.ஜி-யாக கடந்த 2012-ல் அவர் நியமனம் செய்யப்பட்டார்.
மதுரை டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்பதற்கு முன் சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி-யாக இவர் இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில், பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக மாற்றப்பட்டு பணியாற்றி வந்த அவருக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

