வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஓட்டுக்கு ரூ.2,000. ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி.தமிழகத்தில் தற்போதே பணியை ஆரம்பித்துள்ள கட்சி ….
வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), உள்ளிட்ட முக்கிய அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு முக்கிய கட்சி, ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை “கவனிக்க” பெரிய அளவில் பணம் செலவழிக்க திட்டமிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் புதிய எல்லை மாற்றத்துக்குப் பிறகு, பெரும்பாலான தொகுதிகளில் சராசரியாக 2.5 முதல் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களை முழுமையாக கவனித்தால் மட்டுமே வெற்றி உறுதி என்று அக்கட்சி கருதுகிறது.
அதன்படி, ஒரு தொகுதியில் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் வழங்கினால் 40 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடு செய்துள்ளது.
இதில், 20 கோடி ரூபாயை கட்சி தலைமை நேரடியாக வேட்பாளர்களுக்கு வழங்கும். வேட்பாளர் தனது பங்காக 10 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள 10 கோடி ரூபாயை கட்சி தலைமைக்கு நெருக்கமான செல்வந்தர்கள் அல்லது நிதி வழங்குநர்கள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பெரிய தொகை பணத்தை எடுத்துச் செல்வது கடினம் என்பதால், இப்போதே பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தேர்தலுக்குப் பின் கட்சி தலைமைக்கு கணக்கு காட்ட வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இதை கண்காணிக்க ஆங்காங்கே கட்சியின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மத்திய உளவுத்துறை போலீசார் மோப்பம் பிடித்துள்ளனர். அவர்கள் இது குறித்து விரிவான அறிக்கை தயாரித்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த அறிக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கும் சென்றுள்ளது.
டில்லி உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்தக் கட்சியின் வெற்றித் திட்டத்தை தவிடுபொடியாக்க சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக கூறுகின்றன.
இந்த நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் செல்ல வாய்ப்புள்ளது. தமிழக அரசியலில் பண பலம் முக்கிய பங்கு வகிப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன..
திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். தமிழக வெற்றி கழகத்திற்கு இன்னும் பல இடங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே பணம் அனுப்பி வைத்து வருவது திமுக அல்லது அதிமுக தான் என கூறப்படுகிறது.

