தவெக தலைவர் விஜய் 13-ந் தேதி சுற்றுப்பயணம், கட்சியினரின் மனுவை வாங்க திருச்சி போலீஸ் கமிஷனர் மீண்டும் மறுப்பு.
தவெக தலைவர் 13-ந் தேதி சுற்றுப்பயணம்:

விஜய் கட்சியினரின் மனுவை வாங்க திருச்சி போலீஸ் கமிஷனர் மறுப்பு
துணை ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கினர் .
அனுமதி கிடைக்குமா? இன்று முடிவு தெரியும்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக வருகிற 13 – ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் சுற்று பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
13 – ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விஜய் திருச்சி வருகிறார். டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் உரையாற்றுவார் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 6 -ந்தேதி (சனிக்கிழமை) த.வெ.க பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து திருச்சி வந்தார்.
திருச்சி வந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநகர காவல் ஆணையர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை சார்பில் அனுமதி வழங்கிய இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி, ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை எனத் தெரிவித்தது.
அதாவது சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் அதிக அளவில் மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதி, வணிக வாகனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதி. இந்த இடத்தில் அனுமதி வழங்கினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அனுமதி மறுத்தனர். தேவைப்பட்டால் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் நடத்தி கொள்ளுங்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எந்த மனுவும் த.வெ.க சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்படவில்லை.
விஜய் திருச்சியில் பேச அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை தரப்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இதில் கெடுபிடிகள் உள்ளதால் த.வெ.கவினர் மதுரை உயர்நீதிமன்ற நாடி வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கிடையில் இரண்டாவது முறையாக திருத்தப்பட்ட மனுவை திருச்சி த.வெ.க. மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்க வந்தார்.அவர்கள் (8-ந் தேதி ) திங்கள் கிழமை மனுவை வழங்குமாறு தெரிவித்தனர்.ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் நேற்று அனுமதி கேட்டு திருத்தப்பட்ட மனுவை வழங்கவில்லை.இன்று மூன்றாவது முறையாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் மனுவை வழங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர்.ஆனால்
தவெக வினர் அனுமதி கேட்கும் கடிதத்துடன் திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்திக்க போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
திருச்சி மாநகர காவல் துணை ஆணையரை சந்தித்து, பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி கடிதம் கொடுக்குமாறு மாநகர காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இருப்பினும் நீண்ட நேரமாக விஜய் கட்சியினர் கமிஷனர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர்.இதனால் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து இவர்கள் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகில் உள்ள திருச்சி மாநகர துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு மாநகர போலீஸ் துணை ஆணையரை சந்தித்து அனுமதி கடிதத்தை கொடுத்தனர். போலீசாரின் அனுமதி குறித்த தகவல் இன்று மாலை உறுதிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
விஜயின் சுற்றுப்பயணத்திற்கு தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

