Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் விடியல் தேடி பகல்லையே டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம் . வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

0

'- Advertisement -

2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம்.

 

நேற்று வெள்ளிக்கிழமை திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் இச்சங்கம் சார்பில் அரசாணை 149ஐ ரத்து செய்தும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 177 நிறைவேற்ற கோரியும் டார்ச் லைட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

 

பின்னர் மாநில தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளது :-

 

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 90 க்கும் மேற்பட்ட போராட்டங்களை எடுத்தும் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் மற்றொரு நியமனத் தேர்வு என்ற (அரசாணை 149 ஐ) இருள் சூழ்ந்த அரசாணை என்றும் இந்தத் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் திமுக அரசு அமைந்தவுடன் மற்றுமொரு நியமனத்தேர்வு ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எங்களுக்காக வாக்குறுதி அளித்தார். கடந்த காலங்கனில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். சட்டசபையில் கேள்வி எழுப்பினார் திமுக தேர்தல் அறிக்கை 177-ம் இடம் பெறச்செய்தார். மேலும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் செயலியில் 2000 மனுக்களை பதிவு செய்தோம். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாளில் சரி செய்யப்படும் என சொல்லப்பட்ட அத்திட்டம் நான்கரை ஆண்டுகள் கடந்த போதும் எங்கள் கோரிக்கைகள் கிடப்பிலே கிடக்கிறது. மேலும் அவரது வாக்குறுதியும் திமுக தேர்தல் அறிக்கை 177-ம் இன்றுவரை நிறைவேற்றப்படாமலே உள்ளது. இந்த நிலையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை எடுத்தும் எங்களுக்கு ஒரு நல்லதொரு தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி கூட அரசியல் தலையீடுகளால் எங்களுக்குவழங்கப்படுவது கிடையாது. திராவிட மாடலின் விடியல் ஆட்சியில் எங்களுக்கு விடியல் பிறக்கவில்லை. திமுக அரசை நம்பி வாக்களித்து வரலாற்றுப்பிழையை செய்துவிட்டோம். முதல்வரின் சொந்தமண்ணிலே எங்களுக்கு விடியல் பிறக்கவில்லை. அதை வெளிப்படுத்தும் விதமாக பட்டப்பகலில் டார்ச் லைட் அடித்து விடியலைத்தேடி நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

மேலும் திமுக அரசு சொன்னபடி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வை இரத்து செய்யப்பட்டு முதுநிலை சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

குறைந்தபட்சம் எங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையிலாவது எங்களை பணியமர்த்தி எங்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டும். எங்களது குறைந்தபட்ச கோரிக்கையை கூட திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற சட்டசபை தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சண்முகப்பிரியா , பொருளாளர் ஹரிஹரசுதன், மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், மாநில பொறுப்பாளர் ஏகாம்பரம் , நிர்வாகிகள் சிவக்குமார் , முருகன், ராமச்சந்திரன், சுகுணா தேவி , ஹெலினா மாலதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 200 பின் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.