புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: டி.யூ.ஜெ. திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்:
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்ட மாலைமலர் செய்தியாளர் மனோகர் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) திருச்சி மாவட்ட கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து TUJ திருச்சி மாவட்ட தலைவர் A.D.சுகுமார், செயலாளர் R.வளையாபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் சன் டிவி செய்தியாளரும், தற்போதைய மாலைமலர் செய்தியாளருமான மனோகர் புதுக்கோட்டையில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலுக்கு அப்பகுதியில் வீடு வாடகை கொடுக்க சில உரிமையாளர்கள் மறுத்துள்ளனர்.
இந்த செயலுக்கு மனோகர் தான் காரணம் என தவறுதலாக புரிந்து கொண்டு அந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று (7.6.25) மதியம் சுமார் 2 மணி அளவில் மனோகர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மனோகரிடம் தகராறு செய்ததோடு, அந்த பகுதியில் செடிகளுக்கு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்த கட்டைகளை எடுத்து கண்மூடித்தனமாக மனோகர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து மனோகரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். மனோகர் மீது தாக்குதல் நடத்தயும் அடங்காத அந்த கும்பல் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட உபகரணங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மனோகர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.
மூத்த செய்தியாளரான மனோகர் மீது சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
சமூக விரோத கும்பல் நடமாட்டத்தை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு தாக்குதலுக்கு உள்ளான மனோகருக்கு நியாயம் கிடைக்கவும், உரிய நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்துகிறது.
மேலும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழா வண்ணம் காவல்துறையினர் செய்தியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று TUJ திருச்சி மாவட்ட தலைவர் A.D.சுகுமார் செயலாளர்
R.வளையாபதி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.