இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.

இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.அந்த வகையில் திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டனர். இதில் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகளின் குடும்பத்தினர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்த பிறகு முஸ்லிம் மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.