வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த 2 இளைஞர்களை வெறும் 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்.
காரைக்குடி அருகே தேசிய வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திரும்பி வந்த பாக்கியம் என்ற பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெறும் இரண்டு மணி நேரத்தில் கைது செய்து அசத்தியுள்ளனர்.
வங்கியில் பணம் எடுக்க செல்வோர் அல்லது ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்வோர் மிக கவனமாக இருக்க வேண்டும். பணத்தை எடுத்து வந்து சாலையில் எண்ணக்கூடாது. ஏனெனில் ஒரு சிலர் ஏடிஎம்களில் நோட்டம் விடுவார்கள். அவர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் பெண்கள், வயதானவர்களை குறிவைத்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது.
பெண்கள் அதிக பணத்துடன் நடந்து செல்லும் போது அல்லது வாகனத்தில் பணத்துடன் செல்லும் போது, பின் தொடர்ந்து வரும் சில சில்வண்டுகள், பணத்தை பறிக்க பல்வேறு திட்டங்களை போடுவார்கள். நூதன முறையில் மட்டுமல்ல, வழிபறி செய்யவும் தயங்க மாட்டார்கள். எனவே பணம் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். நம்மை யாரும் பின் தொடர்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். காரைக்குடியில் நடந்த சம்பவம் .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் இந்திரா நகரைச் சேர்ந்த பாக்கியம் (வயது 55) நேற்று காலை தனது ஊரை ஓட்டியுள்ள ஒரு தேசிய வங்கியில் ரூ.2.06 லட்சம் பணம் எடுத்தார். தொடர்ந்து அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பேசி கொண்டிருந்திருக்கிறார். பின்னர் மாலை அங்கிருந்து கல்லில் உள்ள தனது வீட்டுக்கு பாக்கியம் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரண்டு நபர்கள், பாக்கியத்திடம் இருந்து பணப்பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அவர் கல்லல் போலீஸாரிடம் பாக்கியம் உடனடியாக சென்று புகார் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட கல்லல் போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன்படி வழிப்பறி செய்தது கல்லல் கோழி பண்ணை தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீ (வயது 22), கல்லல் பொங்கத்தலையைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளையடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல், அவரவர் வீட்டில் சொகுசாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பறித்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பாராட்டினார்.
இதுகுறித்து கல்லல் போலீஸார் கூறுகையில், “வங்கியில் பாக்கியம் பணம் எடுக்கும்போதே, இரண்டு இளைஞர்களும் அவரை உன்னிப்பாக கவனித்துள்ளனர். அதன்பின்னர் அவர் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, வெளியே வரும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார்கள்.
உள்ளூரிலேயே கைவைக்கும், மாட்டிக் கொள்வோம் என்று பயந்த வர்கள், தங்களை அடையாளம் காணாமல் இருக்க முகமூடி அணிந்துள்ளனர். வழிப்பறி செய்த பணத்தை இருவரும் பிரித்து கொண்டு, அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் சிசிடிவி கேமராவில் அவர்கள் பாக்கியத்தை பலோ செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் உதவியால் வசமாக சிக்கி கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர்.