தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த வாலிபர் டூவீலரில் குப்பை லாரி மீது மோதி பலி.

திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( வயது31) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு அவரது இல்லத்தில் திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார்.
இந் நிலையில் நேற்று இரவு தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக, வீட்டிலிருந்து புறப்பட்டு ஜங்ஷன் பாரதியார் சாலை ஜென்னி பிளாசா அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக மாநகராட்சி குப்பை வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதில் எதிர்பாராத விதமாக ஆனந்தராஜ் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் குப்பை வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் ஆனந்தராஜ் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.
இந்நிலையில் அருகில் குப்பை அள்ளிக் கொண்டு இருந்த கோபி என்ற வாலிபர் லேசான காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆனந்தராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த ஆனந்தராஜுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது