திருமண உதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் , ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.2.50 லட்சம் பெற உடனே விண்ணப்பிக்கவும். திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு .
4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
“பார்வையற்றோர், கை-கால் பாதிக்கப்பட்டோர், காது கேளாத மற்றும் வாய் பேசாதோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோரை நல்ல நிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்தால், அவர்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தில் திருமணம் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம், 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

மேலும், தம்பதியில் எவரேனும் ஒருவர் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் அவருக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார், திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன் – மனைவி இருவரின் ஒருவர் நல்ல நிலையில் உள்ளார் என்பதற்கான மருத்துவ சான்று, குடும்ப அட்டையின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கலப்பு திருமணம் செய்தவர்களுக்கும் அரசு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பட்டியல் இனத்தவர்களை திருமணம் செய்தவர்களுக்கு ரூ.2.50 லட்சம் அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அவர்களும் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க முடியும் ஏன் அந்த அறிக்கை தெரிவித்துள்ளார் .