திருவெறும்பூர்: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்தவர் முகமது ஷெரிப் (வயது 35). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் திருச்சியை சேர்ந்த செல்வம் என்ற ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவரிடம் இரவு நேரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் ரூ.93 ஆயிரத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தோற்றதற்கான பணத்தை செல்வத்திற்கு அவர் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக்கிடம் செல்வம் முறையிட அவரும் முகமது ஷெரிப்பிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு கார்த்திக், முகமது ஷெரிப் மேலும் ஒருவர் மது குடித்தபோது பணம் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முகமது ஷெரிப் நண்பர்கள் 4 பேருடன் கார்த்திக் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் காளிதாஸ் சேர்ந்து அரிவாளால் முகமது ஷெரிப்பை 9 இடங்களில் சரமாரியாக வெட்டினர். நண்பர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில்
படுகாயம் அடைந்த முகமது ஷெரிப், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து துவாக்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், அவரது அண்ணன் காளிதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.