திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.
அந்த அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார்
அரசு மருத்துவமனை முன்பு இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் உருட்டிக்கொண்டு சென்ற வாகனம் திருட்டு வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உறையூர் பகுதியைச் சேர்ந்த சபி ( வயது 45 ) அபுதாபி (35 )ஆகிய இரண்டு கொள்ளையர்களையும் கைது செய்து அவர்கள் வசம் இருந்து 14 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.