ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா:
3,09,569 பக்தர்கள் தரிசனம்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழா.
இவ்விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 12-ந் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 13 ந்தேதியிலிருந்து நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான 22-ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு 23-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது.
பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளு வதற்காக நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, கிளி மாலை உள்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு சரியாக 4 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்த நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம்
அருகே உள்ள மணல் வெளியில்
திரண்டு இருந்த பக்தர்களுக்கு மத்தியில் நம்பெருமாள் சுற்றி சுற்றி வந்து அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து சாதாரா மரியாதை அளிக்கப்பட்ட பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமா மணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுளினார்.
நள்ளிரவு 12 மணிக்கு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 24-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு நாளான நேற்று முன் தினம் 2,17,075 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராப்பது உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுளினார்.
ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாளான
நேற்று 92,494 பேர் தரிசனம் செய்தனர்.
இதேபோல் ராப்பத்து உற்சவம் முடியும் வரை எழுந்தருளுவார்.
29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. 2 – ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.