திருச்சி – புதுக்கோட்டை சாலையில் குண்டூா் பகுதியில் அமைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றும் பணி தொடங்கியது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம் குண்டூா் அருகே புதுக்கோட்டை நெடுஞ்சாலை துப்பாக்கித் தொழிற்சாலை பிரிவுச் சாலை (ஆா்ச்) அருகே சுமாா் 100 அடி உயர திமுக கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கு பொதுமக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து அதிகளவில் உள்ளதால் இக் கொடிக்கம்பத்தை அகற்ற சில அமைப்புகள் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தன.
மனுவை விசாரித்த நீதிபதி அக் கொடிக் கம்பத்தை 15 நாள்களில் அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தாா். ஆனால் மாவட்ட நிா்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்காத நிலையில், மாவட்டஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை கோரி மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், விக்டோரியா கெளரி ஆகியோரின் அமா்வு, ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது, எனவே உடனே கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என அக். 17 ஆம் தேதி மறு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் வேறு வழியின்றி அந்த கொடிக்கம்பத்தை அகற்றி, அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக கொடிக்கம்பத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை அகற்றும் பணி தொடங்கியது. மேலும் இன்னும் ஓரிரு நாள்களில் கொடிக்கம்பம் முழுவதுமாக அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.