ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் 26ம் ஆண்டு விழாவில் அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் விஜயகுமாருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விருது.
திருச்சியில் செயல்பட்டுவரும் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் 26-ம் ஆண்டு விழா, சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி அன்னதான சமாஜம் சுந்தரம் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு நிறுவனர் முனைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
இவ்விழாவில், திருச்சி மாவட்டத்தில் உரிமைக் கோரப்படாத ஆதரவற்ற அனாதை உடல்களை உரிய மரியாதையுடன் குடும்ப சகிதமாக நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாரின் பணியினை பாராட்டி அவருக்கு சேவை செம்மல் – 2023 என்ற விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ஸ்கோப் தொண்டு நிறுவன இயக்குனர் பத்மஸ்ரீ சுப்புராமன் உள்ளிட்டோர் விஜயகுமாரை பாராட்டி பேசினார்கள்.
இதில் திருச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதல் நிலை மேனாள் மேலாளர் முனைவர் கலைச்செல்வன், நேரு யுவகேந்திரா திருச்சி மேனாள் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பால் குணா லோகநாத், செயலர் காமகோடி சுந்தர் உட்பட பல சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.