திருச்சியில் பழ வியாபாரியிடம் பணம் பறித்த 4 பேர் கைது.
திருச்சி கீழப்புலி வார் ரோடு வடக்கு தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் மணிமண்டப சாலை பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை இவர் கடையில் இருந்தபோது அங்கு வந்த 4 பேர் அவரிடம் கத்தியை காட்டி ரூ.1,000 பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து அவருடைய சட்டை பையில் இருந்து ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்த நெடுஞ்செழியன் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நெடுஞ்செழியனிடம் பணத்தை பறித்து சென்றது, திருச்சி எடத்தெருவை சேர்ந்த அன்சாரி (வயது24), ஆரோக்கியராஜ் (வயது20), பிரசன்னா (வயது21), அரியமங்கலம் எஸ்.ஐ.டியை சேர்ந்த முகமது ஆசிக் (வயது19) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.