திருச்சி பறவைகள் சாலையில்
டீக்கடையை உடைத்து பொருள்கள் திருட்டு.
தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்.
திருச்சி பறவைகள் சாலையில் உள்ள டீக்கடையை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-.
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் சுரேஷ். இவர்
திருச்சி ஜென்னி பிளாசா அருகே பறவைகள் சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.நேற்று வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலையில் ராஜூவும், அவரது மகன் சுரேஷும் கடையை திறக்க வந்தனர். அப்போது பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் உள்ளே பார்த்தபோது டீ பைலர், இரண்டு சிலிண்டர்கள் மற்றும் டீக்கடையில் இருந்த பொருள்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது .இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சுரேஷ் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடையில் ஏற்கனவே கடந்த வருடமும் திருட்டு போனது. எனவே இந்த திருட்டையும் ஒரே திருடர்கள் தான் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுவும் இதே பகுதியில் சுற்றித் திருபவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருச்சி ஜங்ஷன் ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள இ பி ரோடு பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது டீக்கடையையும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. உடனடியாக மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதேபோல் அதே பகுதியில் உள்ள மற்றொரு டீக்கடையிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை அள்ளி சென்றனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவம் ஜங்ஷன் பகுதியில் உள்ள வியாபாரிகள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.