கர்ப்பிணிப் பெண்ணை அடித்து விரட்டிய கணவர் மாமியார் மீது வழக்கு.

திருச்சி தெற்கு காட்டூர் அண்ணா முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் மேகநாதன் (வயது 33.) இவருக்கும் திருவரம்பூர் பர்மா காலனி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 30) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைப்பெற்றது.
பின்னர் அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இதை யடுத்து மாரியம்மாள் கர்ப்பம் தரித்தார். தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவர் மேகநாதன், மாமியார் ராதா ஆகியோர் மாரியம்மாளை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இது பற்றி அறிந்த மாரியம்மாளின் பெற்றோர்கள் அவர்களை தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன், ராதா ஆகியோர் கர்ப்பிணிப் பெண் மாரியம்மாளை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாரியம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்து தப்பி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் தற்போது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கணவர் மேகநாதன், மாமியார் ராதா ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.