லால்குடி அருகே
ஓடும் பஸ்ஸில் பெண் எல்.ஐ.சி. ஏஜென்டிடம் நகை- பணம் அபேஸ்

திருச்சி லால்குடி அருகே உள்ள செம்பரை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 47) இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நகை அடமானம் வைத்து கடன் பெற முடிவு செய்தார். பின்னர் வீட்டிலிருந்த ஒன்றரை பவுன் நகையை தனது கைப்பையில் எடுத்து வைத்துக்கொண்டு லால்குடி எல்.ஐ.சி. அலுவலகத்திற்குச் சென்றார். அதன் பின்னர் ஒரு அரசு டவுன் பஸ்ஸில் கல்லக்குடியில் இருந்து சந்தைப்பேட்டையில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்ஸில் ஏறிச் சென்றார். பின்னர் சந்தைப்பேட்டையில் பஸ்ஸிலிருந்து இறங்கி தனது கைப்பையை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தார். அதில் வைத்திருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.5,500 ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் அபேஸ் செய்துவிட்டனர்.
இது குறித்து சசிகலா லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.