வங்கி, ஏடிஎம்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த திருச்சி கமிஷனர் சத்திய பிரியா வேண்டுகோள்.
வங்கி ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புகளை நவீன முறையில் பலப்படுத்த வேண்டும் .
திருச்சி மாநகர காவல் ஆணையர்
சத்திய பிரியா வேண்டுகோள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில், இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரொக்கம் திருடப்பட்டது. இதனையடுத்து திருச்சி மாநகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா பேசியதாவது :
திருச்சி மாநகரில் மொத்தம் 190 தேசியஅரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன. இதில் 186 வங்கிகளில் மட்டுமே எச்சரிக்கை மணி (அலாரம்) இங்குகிறது. அதே போல மாநகரில் மொத்தம் 320 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில் 200 மையங்களில் மட்டுமே எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதி உள்ளது. மேலும் 320 ஏடிஎம் மையங்களில் 35 மையங்களில் மட்டுமே காவலாளிகள் பணியில் உள்ளனர். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே வங்கி அதிகாரிகள் பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவு பணம் இருப்பு வைக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களில் கட்டாயம் காவலாளிகள் பணியமர்த்த வேண்டும். இது தவிர மாநகர பகுதியில் இருக்கும் அனைத்து ஏடிஎம் மற்றும் வங்கியில் வெளிப்புறத்தில் இருக்கும் கண்காணிப்பு தரம் உயர்த்தப்பட்ட கேமிராக்களை இணைத்து, தனியாக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணிப்பதுடன் அவற்றை காவல் நிலையங்களுடன் இணைக்கவும் வேண்டும்.
வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பணத்தை மறைமுகமாக கண்காணிக்கும் வகையில் மறைமுக கேமிரா வசதி செய்ய வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய தரமான கேமிராக்கள் அணைத்து ஏடிஎம் மையங்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம் மையங்களில் காங்கிரீட்டால் அமைக்கப்பட்ட தரைத்தளத்துடனோ அல்லது சுவற்றில் கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றுடனோ ஏடிஎம் இயந்திரங்களை அசைக்க முடியாத வகையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட இவற்றை வங்கி அதிகாரிகள் 15 நாள்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றார்.
இதில்,நுôற்றுக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏடிஎம் தொடர்பான பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இயன்றவரை பாதுகாப்பு வசதியை செய்து தருகிறோம் என்றனர். நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி (தெற்கு), உதவி ஆணையர்கள் கென்னடி (கண்டோன்மென்ட்), காமராஜ் (பொன்மலை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
ஏடிஎம் மையங்களில் முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமிராக்கள் அனைத்து மையங்களிலும் பொருத்தபட வேண்டும்.
ஏடிஎம் மையங்களில் இயந்திரங்கள் உடைக்கும்போது, எச்சரிக்கை மணி மையத்திலும் அருகில் உள்ள காவல் நிலையத்திலும் ஒலிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
ஏடிஎம் மையத்துக்குள் ஒருவர் மட்டுமே செல்லும் வகையிலும் அவர் பொத்தானை அழுத்தி கதவை திறந்தபின்னரே மற்றவர் உள்ளே செல்லும் வகையிலும் கதவுகளில் பூட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.
ஏடிஎம் மையத்துக்கு எதிரில் மையத்தை பார்த்தவாறு தரமான கேமிரா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.