திருச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:
மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு, சமீபத்தில் கொடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பு ஒரு அளவுகோலாக இருக்கும்.
பிரதமர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியபடி, 25 ஆண்டுகளுக்கான அமிர்தகால பட்ஜெட்டுக்கு இது ஒரு அச்சாணியாக இருக்கும். அதில், உள்கட்டமைப்புக்காக, 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது. பட்ஜெட் தாக்கல் முடியும் போது தமிழகம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்பது தெரிய வரும். எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும், தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருக்கும்.
கணக்கெடுப்பில், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுஅதனால், நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு நிலவரம், 2020 முதல் 22 வரையிலான கொரோனா கால கட்டத்தில் இருந்து, முழுமையாக மீண்டு, அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளதை காட்டுகிறது.ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளரை நியமிப்பது போன்றவை தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரை, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்? என்ற பேச்சுக்கள் தான் அடிபடுகிறது.
அந்த கூட்டணி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் மக்களுக்கு என்ன செய்வோம், என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இடைத்தேர்தலின் போது, ஆளுங்கட்சியினர் பண பலத்தையும், அதிகார அரசியல் இயந்திரத்தையும் தவறாகத்தான் பயன்படுத்துகின்றனர். அவற்றை எதிர்கொள்ளும் வகையில், பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும்.நாட்டை ஆட்சி செய்யும் பா.ஜ., கட்சியில் பல கட்சிகள் இணைந்து இருக்கின்றன.

தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், மாநில அளவில் பா.ஜ., பங்களிப்பு இருக்க வேண்டும், என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில், சிலை கலாச்சாரம் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது. போட்டி போட்டு சிலை வைக்கின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகள் நிறைந்த 13 மீன் பிடி கிராமங்கள் உள்ள பகுதியில், மக்கள் பணத்தை செலவு செய்து, பெரிய பேனா சிலை வைப்பதில் தி.மு.க.வினர் அவசரம் காட்டுகின்றனர். பேனா சிலை வைக்கும் விவகாரம் தொடர்பான ஆலோசனையின் போது, பா.ஜ., கட்சி சார்பில் பங்கேற்ற மீனவர் அணியை சேர்ந்த முனுசாமி யைப் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை.
பொது இடத்தில், சிலை வைக்கும் போது, மக்கள் கருத்தை மதிக்க வேண்டும். சமூக சேவை மற்றும் இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், அங்கே சிலை வைக்க வேண்டாம், என்று தான் தெரிவித்துள்ளனர். சிலை வைக்கும் விவகாரத்தில், மீனவர்களுக்குத் தான் ஆதரவு. மக்கள் கருத்தை ஏற்காமல் தி.மு.க., அரசு இயந்திரத்தை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்தால், மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
வரும் தேர்தலில் அது பிரதிபலிக்கும்.
கடந்த ஆகஸ்ட் மாதம், ஒரு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பின்படி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, 60 சதவீதம் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில், வேறு எந்த மாநிலத்திலும் எந்த முதல்வருக்கும் இல்லாதவாறு, 16 சதவீதம் ‘இமேஜ்’ சரிவு ஏற்பட்டிருப்பது, தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலினுக்கு தான். அதனால், தி.மு.க.,வினர் அலர்ஜியாகி ஓடுகின்றனர்.
அடுத்த தேர்தலின் போது, 20 சதவீதத்துக்கு கீழே குறைந்து விடும். இதற்கெல்லாம் காரணம், பொது இடத்தில் அமைச்சர்களின் செயல்பாடு தான். மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது, அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் என்ன செய்தாலும், ஈரோடு இடைத்தேர்தல் முடிவு, மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன்,இல. கண்ணன்உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.