டாஸ்மார்க் கடையில் விற்பனையாளரை மிரட்டி மது பாட்டில்கள் திருடிய
2 பேர் கைது.
திருச்சி வரகனேரி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ரை சேர்ந்த விஜயராஜ் (வயது 44). இவரது கடைக்கு வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி ஐந்து மது பாட்டில்களை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து விஜயராஜ் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மது பாட்டில்களை திருடி சென்ற இரண்டு மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதேபோன்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் மதுபான கடையில் மது பாட்டில்களை திருடி கொண்டு மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிய தகவலும் வெளியானது.
இதை அடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மேற்கண்ட புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருவரங்கம் பகுதியில் உள்ள சி.சி. டிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 2 மர்ம ஆசாமிகளை பிடித்து விசாரணை நடத்திய போது மதுபான கடையில் கத்தியை காட்டி மிரட்டி மதுப்பாட்டில்களை திருடிச் சென்றது அவர்கள் தான் என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த ஆண்டனி (வயது 19)தர்மநாதபுரத்தை சேர்ந்த ஜூட் ஆண்டனி (வயது19) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்