திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில்
கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.
தற்போது அந்தப் பாலம் பழுதடைந்ததால் 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாலம் முற்றிலுமாக மூடப்பட்டு போக்குவரத்தானது சென்னை பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில்
தற்போது பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்களை அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த பழைய பாலமானது
1754 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு கடந்த 1929 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு 1976 வரை பயன்பாட்டில் இருந்து வந்தது.
பாலம் பழுதடைந்த காரணத்தால் மூடப்பட்டது.
இந்த நிலையில் அந்த பாலத்தை மீண்டும் திறந்து புனரமைத்து இருசக்கர வாகனங்கள் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பாலத்தை திறப்பது குறித்து அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பாலத்தின் ஒருபுறத்தில் திருவரம்பூருக்கு செல்லும் குடிநீர் குழாயும், மற்றொருபுறம் கழிவுநீர் குழாயும்
செல்வதால் இரண்டு மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது.
எனவே ஒருவழிப்பாதையாக அனுமதிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பழைய காவிரி பாலம் திறப்பது குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று அதிகாரிகளுடன் சென்று பாலத்தை நேரில் பார்வையிட்டார்.
அப்போது பழைய காவேரி பாலத்தை சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டார்.சில பணிகளையும் உடனடியாக செய்து முடிக்குமாறு உத்தரவிட்டார்
.இது குறித்து மேயர் அன்பழகன் கூறுகையில்,
பழைய காவேரி பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் ஒருவழி பாதையாக செல்வதற்கு ஆய்வு செய்துள்ளோம் தற்போது பாலத்தை சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளோம் அதன்படி சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து போக்குவரத்துக்கு ஒரு வழி பாதையாக திறந்து விடுவது குறித்து அறிவிப்பார்.
திருவரங்கத்தில் இருந்து திருச்சிக்கு இருசக்கர வாகனங்கள் மட்டும் வருவதற்கு ஒரு வழி பாதையாக பழைய பாலத்தை திறந்து விட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாலம் திறப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.