Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கார்த்திகை தீப திருநாள்:திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

0

 

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சியில்
மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலின் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபவிழா கொண்டாடப்பட்டது.

இதற்கென மலை உச்சியில் பிரத்யேகமாக சுமார் 40 அடி உயர கோபுரத்தில் 5 அடி உயர தீப கொப்பரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 300 நீளமுள்ள பருத்தித் துணியில் தயாரிக்கப்பட்ட மகா திரி , நல்லெண்ணெய், இலுப்பை எண்ணை, நெய் ஆகியவற்றைக் கலந்த சுமார் 700 லிட்டர் தீப எண்ணெயில் ஏற்கெனவே ஊற வைக்கப்பட்டிருந்தது.
மகாதீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு, தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில், புறப்பாடு செய்து மலை உச்சியில் உள்ள அரச மரத்தடிக்கு கொண்டு வரப்பட்டனர்.

பின்னர் அங்கு நின்றவாறு மலை உச்சியில் உள்ள கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நின்றனர். அதை தொடர்ந்து தீபாராதனை செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தைக் கொண்டு மாலை 6.03 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக மாலை தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இந்த மகா தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அணையாமல் எரியும். இந்த தீபத்தை மலைக்கோட்டையை சுற்றியுள்ள சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் காண முடியும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.