22,000 அரசு அதிகாரிகளாக உருவாக்கிய என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியை கண்டு பிரம்மிப்பாக உள்ளது ,
என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேச்சு.
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு அதன் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சத்யராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது;-
இங்கே என்னுடைய சாதனை, சாதனை என பலவற்றை என்.ஆர். ஐ.ஏ. எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பட்டியலிட்டார். இதில் என்னுடைய சாதனை என்று எதுவும் இல்லை.
என்னை வைத்து இயக்கிய இயக்குனர்களின் சாதனை என்பதே உண்மை. இன்றைக்கு என்னுடைய வெற்றி இளைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களின் சாதனையாக இருக்கிறது.
சினிமாவில் ஒரு நடிகர் ஒற்றை ஆளாக சாதிக்க முடியாது.
100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கின்றேன். ஆனால் உண்மையில் எனக்கு டான்ஸ் வராது. தப்பு தப்பாக ஆடி நாயகிகளின் கால்களை அதிகம் மிதித்திருக்கின்றேன்.
என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி இன்னைக்கு 22 ஆயிரம் பேரை உருவாக்கியுள்ளதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவது முக்கியம்.
வசதியானவர்கள் படிப்பதில் பெரிய விஷயம் இல்லை.
எழுதப் படிக்கத் தெரியாத குடும்பத்திலிருந்து டாக்டர், இன்ஜினியர் ஆவது ரொம்ப கஷ்டம். அதற்குத்தான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால் கல்வியின் தரம் போய்விடும் என்று அதனை மழுங்கடிக்க முயற்சிப்பது சுயநலத்தின் உச்சகட்டம்.
இங்கே கட்டணம் இல்லாமலும் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சொன்னார்கள்.
உங்கள் சாதனைக்கு நான் தலை வணங்குகிறேன்.
நமக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதில் வெற்றி அடங்கியிருக்கிறது.
எனக்கு இலக்கு என்று எதுவும் கிடையாது.
இலகுவான லட்சியங்களை வைத்திருந்தால் ரொம்ப சௌகரியமாக இருக்கும் .
இந்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காக தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள்.
ஒப்பீடு இல்லாமல் நமக்கு எது ஒத்து வருகிறதோ அதில் நாம் பயணம் செய்ய வேண்டும்.
நான் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு பஞ்சம் இருந்தது. அதனால் நானும் கதாநாயகன் ஆகி விட்டேன்.
கடைசியாக நான் கதாநாயகனாக நடித்த பத்து படங்கள் சரியாக ஓடவில்லை. முட்டி மோதி பிரயோஜனம் இல்லை என்று குணசத்திர வேடங்களுக்கு மாறிவிட்டேன்.
எந்த சூழ்நிலையிலும் தேடிப் பிடித்தால் மகிழ்ச்சி கிடைக்கும். போட்டி, ஒப்பீடு இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கையில்,
திரைப்படங்களில் கிளிசரின் இல்லாமல் உணர்வுபூர்வமாக என்னால் நடிக்க முடியாது. உடற்பயிற்சி செய்யும் போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கிறது. ஆகவே உடற்பயிற்சி மெண்டல் பிட்னெஸ்க்கும் நல்லது.
பெரியார் படத்தில் சம்பளம் வாங்குவது நியாயம் இல்லை என்று சம்பளம் வாங்கவில்லை. சந்தோசமாக இருக்க தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். அதனால் பல கஷ்டங்களிலும் நான் சந்தோசமாக இருக்கின்றேன் எனக்கூறினார்.