திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் ஒரு வார காலம் பல்வேறு பணிகளை மேற்கொண்ட மாணவ மாணவிகள்.
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் டாக்டர் கார்த்திகேயனியன் வழிகாட்டுதலுடன் நலப்பணித்திட்டத்தின் சார்பாக
சிறப்பு முகாம் 03.08.2022 முதல் 09.08.2022 வரை ஒரு வாரம் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சி மற்றும் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
இதில் 16 மாணவர்களும் 9 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
முகாமின் முதல் நாளில் முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடுதோறும் சென்று மக்களின் வாழ்க்கைத்தர குறிப்பினை சேகரித்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு முகாமில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
மதியம் 3.00 மணியளவில் முகாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் R&D தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில்: நாட்டிற்கு நலம் செய்யும் இத்தகைய அமைப்புகளில் மாணவர்களின் ஈடுபாடு பாராட்டும் வகையில் இருப்பதாகவும் தங்களின் ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ள இம்முகாமானது நல்லதொரு வழிகாட்டியாக அமையும் எனவும், முகாம் நன்முறையில் நடைபெற வாழ்த்தக்களையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு பயன்படும் வகையில்
“இலவச கண் பரிசோதனை” முகாமானது நடைபெற்றது. இப்பரிசோதனை முகாமிற்கு
திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள சாவித்திரி கண் மருத்துவமனைச் சார்ந்த மருத்துவர் ராகுல் மற்றும் அவருடைய குழு வருகை தந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதன் மூலம் 57 கிராம மக்கள் பயனடைந்தனர்.
இரண்டாம் நாள் காலை புதுக்கோட்டை புத்தாஸ் வீரக்கலை நிறுவன செயலர் கார்த்திகேயன் ஆபத்து நேரங்களில் தங்களையும் மற்றவர்களையும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பது குறித்த ‘தற்காப்பு” விளக்கப் பயிற்சியளித்தார்.
மதியம் “இலவச மருத்துவ முகாமானது” நடைபெற்றது. இதில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவத்துறை உதவி பேராசிரியர் பத்மப்பிரியா மற்றும் அவருடைய மருத்துவ குழு மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இம்மருத்துவ முகாமில் 87 கிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மூன்றாம் நாளான அன்று “பேரிடர் மேலாண்மை” குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் பிரகாஷ் ராஜ் பேரிடரை பற்றியும் பேரிடர் காலங்களின் பயன்படும் வகையில் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய பயிற்சிகளை பற்றியும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகள் பற்றியும் எடுத்துரைத்தார். அளுந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
நான்காம் நாள் அன்று காலை “யோகா மற்றும் உடல் நலன்” எனும் தலைப்பில் விவேகானந்தா யோகா மையத்தின் தலைவர் ஸ்ரீதர் மற்றும் செயலர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆசனங்கள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை விளக்கினார். மதியம் அளுந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
ஆறாம் நாளான நேற்று “இலவச கால்நடை மருத்துவ முகாமானது” நடைபெற்றது.
இதில் ஸ்ரீரங்கம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் கணபதி பிரசாத் மற்றும் அளுந்தூர் கால்நடை மருத்துவர் திவ்யபாரதி ஆகியோர் அளுந்தூர் கிராமத்தில் வீடுதோறும் சென்று கால்நடைகளை பரிசோதித்தனர்.
ஆதனைத்தொடர்ந்து காலை 10.30 மணியளவில் “இரத்த தான முகாம்” நடைபெற்றது. இம்முகாமில் திருச்சி உயிர்த்துளி இரத்த வங்கிக்கு 15 அலகுகள் இரத்தமானது நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்களால் வழங்கப்பட்டது. முகாமில் உயிர்த்துளி இரத்த வங்கியின்
மருத்துவர் டாக்டர் பிரபாகரன் கலந்துகொண்டு இரத்த தானம் செய்த மாணவர்களையும் மக்களையும் பாராட்டினார்.
மேலும் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மதியம் அளுந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பாட்டுப்போட்டி நடைபெற்றது.
முகாமின் நிறைவு நாளான இன்று முகாம் நிறைவு விழாவானது நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டம் உதவி ஆணையர் (துணை ஆட்சியர்) ஏ.அக்பர் அலி இதற்கு தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில்:-
சேவை மனப்பான்மையே செறிவு நிறைந்த நாட்டிற்கு ஆதாரம், இதனை வலுப்படுத்தும் இத்தகைய அமைப்புகளின் மாணவர்களின் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்கள் தங்களின் நன்னடத்தையை மேம்படுத்திக் கொள்ள நாட்டு நலப்பணித் திட்டமானது பாலமாக விளங்குகிறது.
இத்தகைய அமைப்புகள் நம் நாட்டின் தனித்தன்மையான “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தொடரை புத்துயிர் பெறச் செய்கிறது. மேலும் மாணவர்கள் இத்தகைய செயல்களை கல்லூரி பருவத்தோடு நிறுத்திவிடாமல் வலிமையோடு இருக்கும் நம் நாட்டினை வல்லரசு நாடாக மாற்ற பாடுபட வேண்டும் எனவும் கூறினார். பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பிற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
டாக்டர் கே. கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார். இறுதியாக தேசிய கீதம் முழங்க
- இறுதியில் மாணவர்கள் பிரியாவிடை பெற்றனர்.