திருச்சி கோ-அபிஷேகபுரம்
கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்.
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கம் சார்பாக இன்று திருச்சி கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.
செயலாளர் காளிமுத்து, பொருளாளர் கரிகாலன் ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் கூறியதாவது;-
காந்தி மார்க்கெட், உறையூர் மீன் மார்க்கெட்,உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபாரிகள் அனைவரும் கொரோனா காலமாக கடை வாடகை, கடை தொழில் வரி பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளை கஷ்டமடைந்த போதிலும் செலுத்தி தான் வருகிறோம்.
இந்த நிலையில் கொரோனா தாக்கத்தினால் வரிகளை செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுநோய் வந்ததற்கு பிறகு எங்கள் பகுதி வியாபாரிகள் கடைகளுக்கு அருகிலேயே தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் ,மினி ஆட்டோ களில் காய்கறிகள் பழங்கள், மளிகை பொருட்கள் தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உயர்கொண்டான் திருமலை ஆற்றுப்பாலம் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் புதிதாக கலைஞர் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி வியாபாரிகள் அனைவரும் பெரும் இழப்பையும் மன உளைச்சலையும் சந்தித்து வருகிறோம்.
ஆகவே உய்யகொண்டான் திருமலை மற்றும் வண்ணாரப்பேட்டை பூங்கா அருகில் நடைபெறும் வாரச்சந்தையை நடத்தக் கூடாது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடமும் அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே இன்று அதை வலியுறுத்தி கோ. அபிஷேகபுரம் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.