ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பேசிய
சீமான் உருவப்படத்தை எரித்த திருச்சி இளைஞர் காங்கிரசார்.
ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து, எரித்து இளைஞர் காங்கிரசார் இன்று திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மெயின்கார்டுகேட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி அருணாசல மன்றத்தில் சீமானின் உருவப் படத்தை செருப்பால் அடித்து, எரித்து இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசி, விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருச்சி அருணாச்சல மன்றத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ் சந்திரன், ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், திருவரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம்,மாவட்ட பொதுச்செயலாளர் சிவா,காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு ஜி.எம்.ஜி.மகேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கீரைக்கொல்லை சக்கரபாணி, மலைக்கோட்டை முரளி, பீமநகர் காசிம், மணிவேல், ஹெலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது சீமானின் உருவப்படத்தை இளைஞர் காங்கிரசார் செருப்பால் அடித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி அருணாசல மன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்திற்கு பின்னர் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் பாரதபிரதமர் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி குறித்து சீமான் அவதூறாகப் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் நாக்கை அடக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். தொடர்ந்து இவ்வாறாக அவதூறு பேசினால் தமிழகத்தில் எங்கும் அவரை நடமாட விட மாட்டோம். காங்கிரஸில் இருப்பவர்கள் காந்தியவாதிகள் என்று சீமான் நினைத்துக் கொண்டிருக்கிறார் .அந்த காங்கிரஸ் கட்சியில் தான் நேதாஜியும் இருந்தார் என்பதை சீமான் மறந்துவிடக் கூடாது என்பதை பகிரங்கமாக எச்சரிக்கிறேன். அவதூறாக பேசி வரும் சீமான் மீது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.