திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அடைப்பு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக மாநகராட்சி சார்பில் 58 கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டது. இந்த ஏலத்தின் மூலம் பலர் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தனர்.
இங்கு உள்ள 58 கடைகளில் சுமார் 30 கடைகள் ஏலம் போய்விட்டது.மீதம ள்ள சுமார் 28 கடைகள் ஏலம் போகாமல் பூட்டியே கிடக்கிறது. இங்கு ஸ்விட் கடை, டீ ,டிபன், செல்போன் கடைகள் உள்ளன. ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் அதிக அளவுக்கு பணம் கொடுத்து ஏலம் எடுத்து விட்டதால் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்று குற்றச்சாற்று கூறிவரும் நிலையில் இன்று திடீரென்று சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அந்த கடையை நடத்தி வரும் உரிமையாளரிடம் கேட்டபோது இந்த கடைகளுக்கு முன்னால் சுமார் 10 அடி அகலத்தில் வழி பாதை உள்ளது. இந்த வழி பாதையில் ஒவ்வொரு கடைக்கும் சுமார் 2 அடி இடத்தை எங்களுக்கு வழங்கினால் நாங்கள் கடையை பார்வையாக வைத்துவிடுவோம். பொதுமக்கள், பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறு இல்லாமல் வைத்து கொள்வோம்.
எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்த கடை அடைப்பு செய்து இருக்கிறோம். மாறாக மாநகராட்சியை எதிர்த்து அல்ல என கூறினர்.