Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா.உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது என அறிவிப்பு.

0

உக்ரைன் மீது ரஷியா இன்று 22-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இதற்கிடையில், தங்கள் நாட்டில் ரஷியா இனப்படுகொலை நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. அதில், உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலை ரஷியா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தமுடியாது என ரஷியா தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரஷியா நிராகரித்துள்ளது. இதன் மூலம், உக்ரைன் மீது ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.