திருச்சி எடமலைப்பட்டி புதூர், பொன் மலைப்பகுதியில்
2 தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை.தங்கள் மனைவி பிரிந்த விரக்தியில்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாத்திரகாரதெரு பகுதியை சேர்ந்தவர் முகைதீன் (வயது29).
பஸ் பாடி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நூர்ஜகான் என்ற மனைவியும் , இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் .
இந்த நிலையில் முகைதீன் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இதில் கோபித்துக்கொண்டு கடந்த மாதம் நூர்ஜகான் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தோகைமலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு முகைதீன் தோகைமலை சென்று தனது மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கேட்டார்.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முகைதீன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
இதேபோன்று பொன்மலை பகுதியில் மனைவியைப் பிரிந்த இன்னொரு தொழிலாளியும் தூக்கிட்டு தற்கொலை செய்தார். திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோணியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ். ( வயது 47). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5 மாதங்களாக குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறிகொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி அவரது சகோதரி பாக்கியமேரி பொன்மலை போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.