Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.

0

 

ரூ 28 கோடியில் நவீனப்படுத்ப்பட்ட திருச்சி சத்திரம் பேருந்து நிலையம். திறப்பு:
இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

அமைச்சர்கள் கொடியசைத்து பஸ்களை இயக்கி வைத்தனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது . அமைச்சர்கள் கே .என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடி அசைத்து பேருந்துகளை பேருந்து நிலையத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இதனை சுற்றிலும் பள்ளி , கல்லூரிகளும், வர்த்தக நிறுவனங்களும் நிரம்பியுள்ளன.

இப்பேருந்து நிலையத்திற்கு தினமும் 873 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் 5945 முறை வந்து செல்கின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் இப்பேருந்து நிலையத்தை ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை கடந்த 30- தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனையடுத்து இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேருந்துக்களுக்கு முன்பாக கொடியசைத்து சத்திரம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

சத்திரம் பேருந்து நிலையம் மொத்தம் 11852 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 7030 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.

ஒரே சமயத்தில் 17 பேருந்துக்கள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 54 கடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறையும், தாய்மார்கள் பாலூட்டும் அறையும் ஆகியன இடம்பெற்றுள்ளன.

முதல் தளத்தில் உணவகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அறை, உணவகம் ஆகியவையும் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஓய்வு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், அப்துல் சமது,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,முன்னாள் துணை மேயர் அன்பழகன், மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மதிவாணன்,சிவசக்தி கன்சக்சன் ஒப்பந்ததாரர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்து செல்லும் போது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்து பேருந்து நிலையத்திற்குள் வந்து இறங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.