செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37), இவரது மகன் கிரி (வயது 9), மகள் மோனிகா (வயது 7).
கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு நேற்று இரவு கோவளம் சென்றுவிட்டு பைக்கில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். கோவளத்தில் இருந்து மண்ணிவாக்கம் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் சென்றபோது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் பைக்குடன் 3 பேரும் லாரியின் பின்புறத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கோபிநாத் அவரது மகன் கிரி, மகள் மோனிகா பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த ஒட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலையோரமாக லாரியை நிறுத்திய டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சாலைவிபத்தில் தந்தை – மகன் – மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் மண்ணிவாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.