திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 2ஆம் தேதி ஒரு லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் பிருந்தா நாயகி, செயல் அலுவலர் ஹேமாவதி, அர்ச்சகர் கஸ்தூரி ராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆண்டுதோறும் மார்கழி மாதம், அமாவாசை, மூலம் நட்சத்திரம் அன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
அன்று ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,00,008 வடைமாலை சாற்றப்படும்.
இந்தவகையில் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு 1,00,008 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது. முன்னதாக அன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.
காலை 7 மணி முதல் தொடர்ந்து வடைமாலை சாற்றும் விழா நடைபெறும்.
வடைமாலை சாற்ற விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம் ஆகியவற்றுடன் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
27 வடையுடன் கூடிய மாலை 75 ரூபாய், 54 வடையுடன் கூடிய மாலை 150 ரூபாய், 108 வடைமாலை உடன் கூடிய மாலை 300 ரூபாய், 508 வடையுடன் கூடிய மாலை 1,500 ரூபாய், 1,008 வடையுடன் கூடிய மாலை 3,000 ரூபாய், 5008 வடையுடன் கூடிய மாலை 15 ஆயிரம் ரூபாய், 10,008 வடையுடன் கூடிய மாலை 30 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி இரண்டாம் தேதி காலை 9 மணி முதல் அனுமந் ஜெயந்தி விழா பிரசாதம் வழங்கப்படும். ஆகையால் அனுமன் ஜெயந்தி விழா அன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.