மாணவர்கள் போராட்டம் மீட்பு அதை வெல்ல வேண்டும் வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு.
மாணவர்கள் போராட்டம் மீட்பு அதை வெல்ல வேண்டும் வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு.
மாணவர்கள் போராட்டங்கள் மூலம்
நீட் தேர்வை வெல்ல வேண்டும்
வெங்கடேசன் எம்.பி.ஆவேச பேச்சு.
இந்திய மாணவர் சங்க நீட் எதிர்ப்பு மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் வரவேற்றார்.
மாநாட்டின் தொடக்கமாக திருச்சி பெரியார் சிலையில் இருந்து பேரணியாக வந்த மாணவர்கள், நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாநாட்டை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடங்கி வைத்து பேசுகையில் : நீட் கோச்சிங் சென்டர்களில் இருந்து பிஎம்கேர்ஸ் மற்றும் தேர்தல் செலவுகளுக்கு எவ்வளவு நன்கொடை வந்து சேர்ந்தது என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
பள்ளிகள், நூலகம், வகுப்பறை, கழிப்பிடம் என எதுவும் ஒரே மாதிரி இல்லாதபோது, தேசிய அளவில் ஒரே விதமான கற்றல் திறன் வெளிப்பாடு என்பது எப்படி சாத்தியம்?
தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது ஒற்றை பண்பாட்டு தேசியத்தை கட்டமைப்பதற்கான கொள்கை. அது ஆபத்தானது. நீட் என்பது மருத்துவ மாணவர் சேர்க்கையோடு நிற்காமல், மற்ற அறிவியல் படிப்பில் சேர நினைக்கும் மாணவர்களையும் பாதிக்கும் விதத்தில் இருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.

மாநாட்டில் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில் :
நீட் விலக்கைக்கோரி பெறுவதற்கான உரிமையும், திறனும், திராணியும் தமிழகத்திற்கு உண்டு என்பதை நிருப்பிக்கின்ற அமைப்பு தான் இந்திய மாணவர் சங்கம். நீட் தேர்வு ரத்தாகுமா? இல்லையா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் அலசி ஆராயட்டும். நீட் வேண்டாம் என்று மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வெல்ல வேண்டும்.
மும்மொழி கொள்கையை ஏற்கமுடியாது என ஒற்றை மாநிலமாக தமிழகத்தில் இருந்து நாம் கூறினோம். இருமொழி கொள்கை தான் இருக்கும் என நிரூபித்த சக்தி தமிழகத்தின் மாணவர்கள் சக்தி. அதிகார மையம் என்றாவது மக்களுக்காக ஏதாவது செய்திருக்கின்றதா? அப்படி செய்திருந்தால் அதன் பின் போராட்டக்காரர்களின் உயர்ந்த கை இருக்கும்.
தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்பதற்கு 100 காரணங்கள் இருக்கின்றது. நீட் என்ற திரிசூலத்திற்கு 3 முனைகள் உள்ளன. ஒரு முனை மாநில உரிமைகளையும், மாநில கல்வி முறையை குத்தி கிழிக்கின்றது. இரண்டாவது முனை டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. மூன்றாவது முனை மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்து தற்கொலைக்கு தூண்டுகிறது.
நீட் தேர்வு என்பது, 4000 மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை சம்பந்தப்பட்டது இல்லை. தமிழகத்தின் உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி சம்பந்தப்பட்டது. மேலும் இங்கு காலங்காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதி சம்பந்தப்பட்டது.
இந்திய அளவில்; தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் 63 சதவீதம் மகப்பேறு பிரசவம் நடக்கிறது. குஜராத்தில் 31 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 27 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் நடைபெறுகிறது. இந்த ஒற்றைப் புள்ளி விபரம் போதும், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு குறித்து எடுத்து கூறுவதற்கு. நீட் பிரச்சனையில் ஒன்றிய அரசு பின்வாங்கும் வரை தமிழ் சமூகம் ஒருபோதும் தனது போராட்ட மரபை கீழே விடாது என்பதை மாணவர்கள் மீண்டும். மீண்டும் நிருபிக்க வேண்டும் என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில் : இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை பார்த்துவிட்டு, ஒரு சில மாநிலங்களை சேர்ந்தவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் சாதியைக் காட்டி கல்வியை மறுத்தார்கள். இப்போது சட்டத்தைக் காட்டி கல்வியை மறுத்துவருகிறார்கள். இதற்கு முடிவுகட்டும் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. இதற்கு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி, மாணவர்களையும், பொதுமக்களையும் அணி திரட்ட வேண்டும். இதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் கருத்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் போல நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்து வெற்றி பெற வேண்டும். நீட் தேர்வு சட்டமாக்குவது குறித்த மசோதா மாநிலங்களவையில் வந்தபோது நீட், நெக்ஸ்ட் கூடாது என்ற திருத்தத்தை நான் கொண்டு வந்தேன். அதை குரல் வாக்கெடுப்பிற்கு விட்டனர். திமுகவில் வெறும், 4 எம்பிகள், கம்யூனிஸ்ட் கட்சியில் வெறும், 4 எம்பிகள் இருந்த நிலையில், திருத்தத்தை ஆதரித்து 88 ஓட்டுகளை பெற்றோம். ஆனால், 13 எம்பிக்களை வைத்திருந்த அதிமுக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது. அதிமுகவும் வாக்கெடுப்பில் பங்கேற்று இருந்தால், மாநிலங்களவையில் நீட் சட்டமே நிறைவேறி இருக்காது என்றார்.
மாநாட்டில் மூட்டா பொதுச்செயலாளர் நாகராஜன், அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை, அரசு கல்லூரி ஆசிரியம் மன்ற மாநில தலைவர் சிவராமன், தமிழ்நாடு உயர்நிலை. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் கோபிநாதன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் நீட் தேர்வை எதிர்ப்பது. நீட் தேர்வு விலக்கு அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தற்கொலைக்கு எதிரான நடவடிக்கையை ஒன்றிய, மாநில அரசு எடுக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு வழங்க வேண்டும். பிஜி-என்இஇடி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை முன்மொழிந்து இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர்கள் கண்ணன், ஜனார்த்தன், மத்தியக்குழு உறுப்பினர்கள் நிருபன்சக்கரவர்த்தி, ஜான்சிராணி, சத்தியா, ஜெயபிரகாஷ், மாநில துணைச்செயலாளர்கள் ஆறுபிரகாஷ், அரவிந்தசாமி, பிருந்தா, முகேஷ் ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் மாரியப்பன் நிறைவுரையாற்றினார்.
முன்னதாக, நீட்தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் நினைவு ஜோதியை நீட்தேர்வால் உயிரிழந்த அரியலூர் அனிதா, சேலம் சௌந்தர்யா, புதுக்கோட்டை கரிஷ்மாஸ்ரீ ஆகியோரின் பெற்றோர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மாநாட்டு மேடையில் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன், மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரிடம் வழங்கினர். முடிவில் மாவட்ட துணைசெயலாளர் சூர்யா நன்றி கூறினார்.
மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.