திருச்சியில் நேற்று இரவு கனமழை பெய்தது.
இந்த கனமழையால் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள 60 வருட பழமை வாய்ந்த அரசமரம் நேற்று இரவு பெய்த கனமழையால் 11 மணியாளவில் நிலைகுலைந்து வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் கோட்ட அலுவலக காம்பவுண்ட் சுவர் மற்றும் மார்க்கெட் செல்லும் தெருவை மறைத்தபடி எதிரே உள்ள வீட்டின் மீது விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மரம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பம் முறிந்து மின்சார ஒயர்கள் அறுந்து சாலையில் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் தற்போது வரை அப்பகுதியில் மின்சாரம் இல்லை.
இதனைத் தொடர்ந்து மின் ஊழியர்களும் உடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை வைத்து மின் வினியோகத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.