Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மளிகை பொருட்கள் வாகனம் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி.

0

மளிகைக் கடைகள் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு  உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

இதனிடையே, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

காய்கறிகளை மட்டும் நடமாடும் கடைகள் மூலம் விற்பனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவானது வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வருகிற ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.