Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தலாம். பிரபல இ.என்.டி.டாக்டர் ஜானகிராமன் பேட்டி.

0

அறுவை சிகிச்சை மூலம் கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர் ஜானகிராம் கூறினார்.

திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனரும் பிரபல காது, மூக்கு,தொண்டை நிபுணருமான டாக்டர். டி.என். ஜானகிராம் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

இப்போது மக்களை பீதியில் ஆழ்த்தி கொண்டிருக்கும் கருப்பு பூஞ்சை நோய் பற்றி நான் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி அளித்த ஒரு பேட்டியில் கூறி இருக்கிறேன்.

கொரோனா முதல் அலையில் முதன்முதலில் அந்த நோயைப் பற்றி நான் தான் எடுத்துக் கூறினேன். அந்த நோய் தான் தற்போது வேகமாகபரவிக்கொண்டிருக்கிறது.

இந்த நோய் 1885 உலகில் தோன்றியதாக கூறப்படுகிறது.

இந்த நோய் பல வருடங்களுக்கு முன்பே மனிதர்களை தாக்க வந்து விட்டது என்பதுதான் உண்மை. ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது அவர்களை எளிதாக தாக்கி விடுகிறது.

பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது அதிகம் வரும்.இந்த நோயின் அறிகுறிகள் கண்களுக்கு கீழ் மரத்துப் போகுதல், மூக்கடைப்பு ஏற்படும், கண் பார்வை மங்கலாக மங்குதல் போன்றவையாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக காது, மூக்கு ,தொண்டை நிபுணரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.

இந்த நோயானது மூளையை பாதிப்பதற்கு முன்பாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம்.

அறுவை சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம். கருப்புப் பூஞ்சை நோய் மூளைக்குச் சென்று விட்டால் அவரை காப்பாற்ற முடியாது. கண் அல்லது மூக்கில் பூஞ்சை அறிகுறி தெரிந்தவுடன் காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் எளிதாக குணப்படுத்தலாம்.

இதற்கு அம்போ டெரிசன் என்ற ஒரு ஊசியும் முக்கியமானது. மருந்து மாத்திரைகளும் வழங்கப்படும். இந்த ஊசி மருந்துக்கு இப்போது இந்தியா முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஊசியை கள்ளச்சந்தையில் ரூ.30 ஆயிரம் வரை விற்கிறார்கள். அதனை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

எங்களது மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயாளிகள் 160 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு டாக்டர்.ஜானகிராமன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.