Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துறையூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ராணியின் கணவர் தற்கொலை?

0

துறையூர் முன்னாள் எம்எல்ஏ கணவர்
தூக்கமாத்திரை உட்கொண்டதால் சாவு

தற்கொலையா என போலீசார் விசாரணை

துறையூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராணியின் கணவர் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை உட்கொண்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி துறையூர் சட்டப்பேரவை (திமுக) உறுப்பினர் ராணியின் கணவர் ராமச்சந்திரன் (வயது52). இவர் திருச்சி கே. கே. நகர், வெள்ளி திருவாசகமணி தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், விமான நிலையத்தில், தீயணைப்புத்துறையில் முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி, முற்பகலில் வீட்டிலிருந்தபோது மயங்கிய நிலையில், திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளவுக்கு அதிகமான அளவு தூக்கமாத்திரை உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே அவர் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் வகையில் அதிகளவில் மாத்திரை உட்கொண்டாரா என்ற வகையில், கே.கே. நகர் போலீஸசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இத்தம்பதியருக்கு அருண் பாபு (வயது28), நர்மதா
(வயது26), ஜீவானந்த் (வயது23) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு.

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் செல்வம் நகரை சேர்ந்தவர் நா. மணிகண்டன் (வயது 45). பொறியாளரான இவருக்கு சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கருமண்டபத்தில் உள்ள ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டாராம். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனைத் தொடர்ந்து உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

 

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரேதப் பரிசோதனைக்கூடம் அருகே, சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

மயங்கி விழுந்த பெண் சாவு :

திருச்சி உய்யகொண்டான் திருமலை கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவரது வீட்டில் சாந்தி (வயது42) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாந்திக்கு வியாழக்கிழமை திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.

இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக வந்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.