அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் சங்கரய்யா நினைவு அரங்கத்தில்நடைபெற்றது.
மாநாட்டு கொடியை சங்க முன்னாள் ஒன்றிய தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஏற்றினார். மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் என்.தங்கதுரை தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு உறுப்பினர் வி.கவிதா அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய தலைவர் ஓ.நடராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
மாநில பொருளாளர் எ.பழனிச்சாமி துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.லெனின், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜேஷ் கண்ணா வேலை அறிக்கையை வாசித்தார். மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விபிஜி ராம்ஜி என்ற பெயரில் வேலை உரிமையை பறிக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஆண்டுக்கு 200நாட்கள் வேலை, சட்டக்கூலி ரூ 700 வழங்க வேண்டும். திருச்சி மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன வடிகால் வாய்க்கால், குளங்களை100 நாள் பணியாளர்களை கொண்டு தூர்வார வேண்டும். ஊராட்சி ஒன்றியம் மூலம் நடைபெறும் பணிகளை இயந்திரங்கள் மூலம் செய்து விட்டு 100 நாள் பணியாளர்களைக் கொண்டு பணி செய்ததாக கணக்கு காட்டுவதை தடுக்க வேண்டும். அந்தநல்லூர், மணிகண்டம் ஒன்றிய பகுதியிலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள நீர்நிலை மேல் தேக்க தொட்டியை மாதம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வசிக்கும் மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும். வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்டக்குழு உறுப்பினர் வி.சீனிவாசன் பேசினார். மாநில செயலாளர் வி.மாரியப்பன் நிறைவுறையாற்றினார். நிறைவாக ஒன்றிய பொருளாளர் ஆர்.மாணிக்கம் நன்றி கூறினார்.

