திருச்சி சிறுகனூரில் திமுக மாநில மாநாடு நேற்று இரவு 7.30 மணியளவில் முடிவடைந்தாலும் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் நீடித்தது.
திருச்சி சிறுகனூரில் திமுகவின் மாநில மாநாடு நேற்று மார்ச் 9-ந் தேதி நடைபெற்றது. இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்காக சுமார் 50,000 வாகனங்களில் திமுக நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். 200 ஏக்கரில் இதற்காக தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.
திமுகவின் இந்த மாநாடு இரவு 7.30 மணியளவில் முடிவடைந்தது. இதனையடுத்து மாநாட்டுக்கு வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர்.
இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
சிறுகனூர் மாநாட்டு பந்தலில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வருவதற்கு சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலானது.
எங்கெங்கே மாற்று பாதைகள் தென்படுகிறதோ அந்த பகுதிகளிலும் வாகனங்கள் நுழைந்தன.. இதனால் நள்ளிரவைத் தாண்டியும் குக்கிராமங்களிலும் கூட வாகனங்கள் பல மணிநேரம் காத்து கிடந்தன.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அத்தனை ஆயிரம் வாகனங்கள் காத்திருந்தும் மாநாட்டு சிறப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் களமிறங்கி அதனை ஒழுங்குபடுத்த முன்வரவில்லை. ஆளும் கட்சியினரை போலீசாரே கைவிட்டதாக குமுறிய திமுகவினர் மற்றும் பத்திரிகையாளர்களே பல இடங்களில் ஆத்திரத்துடன் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய களமிறங்கினர்.போலீசார் ஆங்காங்கே ஐந்து, ஆறு பேர் என்று கூடி நின்று கதைபேசி கொண்டு இருந்தார்களே தவிர போக்குவரத்தை சரி செய்யவில்லை.

அதிகாலையில் தான் போக்குவரத்து படிப்படியாக சீர் அமைய தொடங்கியது.

