சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.
தன்னுடைய வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மூலமாக, சென்னையில் வசித்து வரும், தென்காசி – நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரி கோபாலகிருஷ்ணன் என்கிற ஹரி (வயது 41) என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, அவர் ஆனந்தகுமாரிடம் ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை கடன் வாங்கி தருவதாக ஹரி கூறினாராம். அதற்காக ரூ.77 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆனந்த்குமாரும், ரூ.70 லட்சத்தை வங்கி மூலமாக தந்துள்ளார்.
இதைபடுத்து கமிஷன் பணத்தை பெற்றுக்கொண்ட ஹரி, பாலுவும், தலா ரூ.10 கோடிக்கான 3 டிமாண்ட் டிராப்ட், ரூ.5 கோடிக்கான 1 டிமாண்ட் டிராப்ட் எடுத்து தந்துள்ளார்கள். அதாவது ரூ.30 கோடிக்காக 2 டிடி எடுத்து கொடுத்துள்ளனர். ஆனால், ஆனந்த்குமார் அவற்றை வங்கியில் செலுத்தியபோது, அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, ஹரி மற்றும் பாலுவிடம் கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே ஹரி மீது உள்ள பழைய நிலுவை வழக்குகள் குறித்து போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஹரி சென்னையில் இருந்து காரில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தபோது திருச்சி பைபாஸ் சாலையிலேயே அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரது காரை சோதனையிட்ட
போது அதில் ரூ.12 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் வரை ரொக்கம், 7 செல்போன்கள் மற்றும் 2 டாங்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல சேலத்தில் பாலுவையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 23ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
தற்பொழுது ஹரி நாடார் சத்திரிய சான்றோர் படை தலைவராக இருந்து வருகிறார்.
இவர் ஏற்கனவே நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய புகாரிலும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
மேலும் இவர் குஜராத் சேர்ந்த தொழிலதிபருக்கு ரூபாய் 100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

